Saturday, October 11, 2008

அமெரிக்காவில் நவராத்திரி விழா


கடந்த 6 வருடங்களாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப் பெண் நான் . ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டில் நவராத்திரி பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.எங்களுக்கு 2002 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் ஆன 10 நாட்களிலேயே என் கணவருடன் நான் அமெரிக்கா வந்துவிட்டேன். வந்த இரு மாதங்களிலேயே நவராத்திரி பண்டிகை வந்துவிட்டது. எங்களிடம் ஒரு பொம்மை கூட இல்லாத நிலையில் எல்லா சுவாமி படங்களையும் கம்ப்யூடரில் பிரிண்ட் எடுத்து அனைத்தையும் அழகாக வெட்டி சிறு சிறு அட்டையில் ஒட்டி வைத்திருந்தோம். (மேலே உள்ள படம்)

அதற்கு அடுத்த வருடம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கொலு வைக்க முடியவில்லை. அதற்கு அடுத்த வருடம் எங்கள் மூத்த மகன் பிறந்தான். அவன் பிறந்த ஓரிரு மாதங்களில் நவராத்திரி வந்தது. அப்போது குழந்தையின் பொம்மைகளை எல்லாம் அடுக்கி கொலு வைத்தோம். அது மட்டுமில்லாமல் ஒரு remote கார் வாங்கி அதன் மேல் பாகத்தை அகற்றி அதன் மீது தேரைப் போன்று அலங்கரித்தோம். அதற்கு அடுத்தடுத்த வருடங்களும் அவ்வாறே இங்கே அமெரிக்காவிலேயே கிடைக்கும் பொம்மைகளை வைத்து நவராத்திரியைக் கொண்டாடினோம்.பிறகு 2006 ஆம் ஆண்டு எங்கள் மகள் பிறந்தாள். அவள் பிறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நவராத்திரி வந்தது. அப்போதும் நாங்கள் விடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதில்தான் இன்னும் நிறைய புதுமைகள் செய்தோம். மொத்தம் 5 படிகள் வைத்தோம்.

முதல் படியில் சம்பிரதாயமாக விநாயகர் மற்றும் அம்மன் சிலைகளை வைத்தோம். இரண்டாவது படியில் தசாவதாரம் பொம்மைகளை வைத்தோம். இதில் என்ன விசேஷமென்றால் இந்த தசாவதார பொம்மைகள் அனைத்தும் play dough என்ற ஒரு வகை மாவினால் வீட்டிலேயே எந்த ஒரு அச்சும் (mold) இல்லாமல் கைகளாலேயே செய்யாப் பட்டவையாகும். இவையனைத்தையும் பிரசவத்துக்கும் சில நாட்களே இருந்த நிலையில் செய்து முடித்தேன். அதற்கு அடுத்த படியில் கஜேந்திர மோக்ஷம் இதற்கு எனது 2 வயது மகனின் பொம்மைகளைப் பயன் படுத்திக் கொண்டேன். 4 வது படியில் கயிலையில் இருந்து பார்வதி பரம சிவனிடமிருந்து ஆதி சங்கரர் 5 லிங்கங்களை பெற்று வரும் காட்சி இதுவும் play dough வினால் செய்யப்பட்டதுதான். பிறகு 5 வதாக ஒரு பார்பி பொம்மையை அம்மனாக அலங்கரித்து வைத்தோம். இதைப் பார்த்த அனைவரும் பாராட்டினார்கள். இது 2006 ஆம் வருடம் webulagam இல் இன்றைய மங்கை என்ற தலைப்பில் வெளி வந்த கட்டுரையில் பாராட்டி இருந்தார்கள் அது மட்டுமில்லாமல் அவர்கள் எனக்கு நல்ல முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனையும் செய்திருந்தார்கள். webulagam இணையதளத்தினர் மற்றும் வாசகர்களின் பிரார்த்தனையின் பலனாக அந்த பராசக்தியின் வடிவமாக எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.












சென்ற வருடம் 2007 ஆம் ஆண்டு நான் இந்தியா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் கொலு வைக்க இயலவில்லை. இந்த வருடம் என்னுடைய 4 வயது மகன் மற்றும் 2 வயது மகளுடன் மிகச் சிறப்பாக நவராத்திரி விழாவைக் கொண்டாடினோம்.வழக்கம் போல் முதல் படியில் விநாயாகர் மற்றும் துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி பொம்மைகளை வைத்தோம்.2 வது படியில் அசோகவனத்தில் சிறிய் வைக்கப் பட்டிருந்த ஸீதையை ஹனுமார் சந்தித்து தைரியம் கூறும் காட்சி.3 வது படியில் திருஞான சம்பந்தருக்கு பார்வதி தேவி பால் கொடுத்ததை அறியாத அவரது தந்தை அவரை கண்டிக்கும் காட்சி ( சீர்காழி ஸ்தல வரலாறு)இந்தப் படியிலேயே சென்ற முறை செய்த தசாவதார பொம்மைகளையும் வைத்துவிட்டோம். 2 மற்றும் 3 வது படிகளில் உள்ள பொம்மைகள் அனைத்துமே கையால் செய்யப்பட்டவைதான்.4 வது படியிலும் சென்ற முறை வைத்த கஜேந்திர மோட்சம் காட்சியையே வைத்துவிட்டோம். 5 வதாக கொஞ்சம் பெரிய அளவில் கிடைத்த ஒரு பார்பி பொம்மையை இவ்வருடம் துர்கையாக அலங்கரித்தோம். அதற்கு ஏற்ற அளவில் ஒரு சிங்கம் பொம்மையையும் தேடி பிடித்து வாங்கி வைத்தோம்.இதற்கெல்லாம் என் கணவரும் குழந்தைகளும் மிகவும் ஒத்துழைத்தார்கள்.
நமது கலையும் கலாச்சாரமும் நமது பண்டிகைகளில்தான் வெளிப் படுகின்றன. அவற்றில் நவராத்திரி மிகவும் முக்கியமான பண்டிகையாகும். எங்களைப் போல வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு நமது பாரம்பரியத்தையும் பழக்க வழக்கங்களையும் கடை பிடிப்பது கொஞ்சம் கடினமான செயல்தான். கொலு வைப்பதற்கு பொம்மைகள் வேண்டுமானால் ஒன்று இந்தியாவிலிருந்து வாங்கி வர வேண்டும். அல்லது இங்கேயே உள்ள சில கோவில்கள் அல்லது இந்திய கடைகளில்தான் வாங்க வேண்டும். அதுவும் எல்லா கோவில்கள் மற்றும் இந்தியக் கடைகளிலும் கிடைத்துவிடாது. இதனால்தான் நாங்கள் எங்களுக்கு விருப்பமான பொம்மைகளை நாங்களே செய்து கொள்வது எனத் .தீர்மானித்தோம்
சிறிது பொறுமையுடனும் ஆர்வத்துடனும் நவராத்திரியைக் கொண்டாடினால், அதன் மூலம் கிடைக்கும் பலனோ மிகவும் பெரிது.
இப்போது நாங்கள் நவராத்திரியை விமர்சையாகக் கொண்டாடுவதால், என் 4 வயது மகனுக்கும் 2 வயது மகளுக்கும் சிறு வயது முதலே நமது பண்பாட்டின் மீது பற்று ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், நவராத்திரி பண்டிகையின் வரலாறு என்ன? அதை ஏன் கொண்டாடுகிறோம்? என்பது முதல் , கொலுவில் வைக்கப் பட்டுள்ள பல்வேறு theme களுக்கான கதைகளும் இருவருக்கும் அத்துப் படியாகிவிட்டது. இதன் மூலம் நமக்கும் நமது புராணக் கதைகளை இவர்களுக்கு விளக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் நவராத்திரி சமயத்தில் பல விதமான ஸ்லோகங்கள் சொல்வது பூஜைகள் செய்வது மற்றும் பக்திப் பாடல்களைப் பாடுவது என்றெல்லாம் செய்வதால் குழந்தைகளுக்கும் இவற்றிலெல்லாம் ஒரு பரிச்சயம் ஏற்படுகிறது. இது தவிர பலரையும் அழைத்து தாம்பூலம் கொடுப்பதால் அனைவரிடமும் நல்ல முறையில் பழகும் வாய்ப்பையும் விருந்தினரை உபசரிக்கும் முறையையும் கற்றுக் கொள்கிறார்கள்
இத்தகைய நல்வாய்ப்பை அளித்த நவராத்திரி பண்டிகையை ஒவ்வொரு வருடமும் தவறாமல் கொண்டாடுவதற்கு அந்த அம்பிகையின் அருளை வேண்டுகிறேன்.